Tuesday, June 26, 2012

மவுனமே ஞானத்திற்கான வழி



சாரிபுத்தர் என்பவர் ஞானம் பெறப் புத்தரைத் தேடி வந்தார்,
புத்தர் சொன்னார், ‘உன் மனதில் ஏராளமான கேள்விகள், எண்ணற்ற சந்தேகங்கள் இருப்பதை நான் அறிவேன். அதனால் உன் மனம் அலைபாய்கிறது. நீ என்னுடன் இரு. ஒரு வருடம் எதுவும் பேசாது மவுனமாயிரு. அடுத்த ஆண்டு உன் கேள்விகளுக்கு நான் தெளிவாக பதில் சொல்வேன்."
சாரிபுத்தர் மவுனமானார். அன்று முதல் அவர் ஏதும் பேசுவதேயில்லை. ஓராண்டு கழிந்தது. "சாரிபுத்தா! உன் ஐயங்களைக் கேள்," என்றார் புத்தர்.
"கேட்க ஏதுமில்லை, பெருமானே!" என்றார் சாரிபுத்தர். ஆம். அவர் ஞானம் பெற்றுவிட்டார்.
நீதி : மனமே கேள்வியின் பிறப்பிடம். பதிலும் அங்கேயேதான் இருக்கிறது. மௌனம் மனதின் கதவுகளை விரியத் திறக்கிறது. அப்போது அங்கு நிறைந்திருந்த ஆரவாரங்கள், ஐயங்கள் ஆகியவை கூச்சலாக வெளியேறிவிடுகின்றன. அதன் பின் அங்கே விடை அமைதியாக மேடையேறுகிறது.