Tuesday, June 26, 2012

சமநிலையில் இருக்கிறேன்

ஜென் குருமார்களில் புகழ் பெற்றவர் ஷ்வாங்ட்ஸு. அவரது கருத்துக்கள் ஜென் தந்துவங்களில் மிகவும் பிரபலமானவை. அவரிடம் பலரும் வருவதுண்டு. அவர்கள் அவரிடம் பலவற்றைப் பற்றியும் பேசுவார்கள். அவரது கருத்துக்களையும் கேட்டுச் செல்வார்கள்.
அவ்வூரில் ஓர் இசைக்கலைஞன் இருந்தான். அவனிடம் நல்ல இசைத்திறமை இருந்தது. கூடவே கலைஞர்களுக்கே உரிய சில தீய பழக்கங்களும், அவனிடம் இருந்தன. தீய பழக்கங்களின் காரணமாகப் பலரையும், ஏமாற்றியிருந்தான் அவன்.
குருவிடம் வந்த ஒருவர் அவனது தீய பழக்கங்களை விவரித்தார். அவன் ஓர் ஏமாற்றுப் பேர்வழி. மோசடிக்காரன். தீயவன் எனப் பலவாறு அவனை வசைபாடினார்.
அதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த குரு, அவன் ஒரு அற்புதமான கலைஞனாயிற்றே! அவன் இசையை இன்றைக்கெல்லாம் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கலாமே என்றார்.
அப்போது அங்கு வந்த மற்றவர், ஆமாம், அவன் விரல்கள் வித்தை காட்டும். சங்கீதமே அவனிடம் கைகட்டிச் சேவகம் புரியும் ! என்றார்.
அதைக் கேட்ட குரு, அப்படியா? அவன் ஒரு மோசமான ஏமாற்றுப் பேர்வழியாயிற்றே என்றார்.
குறை சொன்னவர், புகழ்ந்தவர், என இருவருமே குழம்பினார்கள். என்ன இது இப்படி பேசினால், அப்படி சொல்கிறார். அந்தப்பக்கம் போனால் இந்தப் பக்கம் வருகிறார். என்று விழித்தனர்.
ஏடாகூடமாகச் சொல்கிறீர்களே அவனைப் புகழ்கிறீர்களா? இகழ்கிறீர்களா? என்று துணிந்து கேட்டார் அவர்களில் ஒருவர்.
இரண்டுமே செய்யவில்லை. வெறும் சமநிலை செய்கிறேன். எந்த மனிதனையும் எடைபோட நாம் யார்? ஒருவனை தீயவன் நல்லவன் என்று கூற உங்களிடம் என்ன அளவுகோல் இருக்கிறது? எதையும் ஒப்புக்கொள்வதோ. எதிர்ப்பதோ என் வேலையும் இல்லை. அதற்கான உரிமையும், என்னிடம் இல்லை. அவன் தீயவனும் அல்ல. உத்தமனும் அல்ல. அவன் அவனே! அவன் அவனாக இருக்கிறான். அவன் செயலை அவன் செய்கிறான். உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்.
நீதி : காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித விமர்ச்சனங்கள் என்பது அவரவர் கண்ணோட்டம்தான்.