Tuesday, June 26, 2012

நீயும் அதுவே


நீயும் அதுவே
அந்த இடம் மிகவும் அமைதியாக இருந்தது. திடீரென்று அமைதியை கிழித்துக் கொண்டு பெரும் ஆரவாரம் கேட்டது. ஆரவாரத்தின் நடுநடுவே விவாதங்கள், கேள்விகள், பதில்கள், கூச்சல்கள், குறுக்கீடுகள் என்று அந்த இடமே களேபரமாயிருந்தது.
குருவுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. நானாவிதமாக கேட்ட குரல்களில் ஒன்று அவருக்கு தெரிந்த குரலாக இருக்கவே உற்றுக்கேட்டார் அவர். அது அவரது சீடர்களுள் ஒருவரின் குரல். உடனே அவனை அழைத்து இந்தக் கூச்சலுக்கான காரணத்தைக் கேட்டார்.
குருவே அறிஞர்களின் குழு ஒன்று உங்களைக் காண வந்துள்ளது என்றான் அந்த சீடன்.
அவன் சொல்வதை குரு அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார். நான் அதற்கு அனுமதி கொடுக்க மறுத்தேன். அதனால் ஏற்பட்ட ஆட்சேபக்குரல்கள்தான் இவை. என்ற அவன் தொடர்ந்து உண்மையான ஞானம் இல்லாமல் வெறும் புத்தக அறிவை மட்டுமே வைத்திருப்பவர்களுடன் எங்கள் குரு பேசி நேரத்தை வீணாக்க மாட்டார் என்று அடித்து சொல்லிவிட்டேன் வந்திருப்பவர்கள் வெறும் தர்க்க வாதிகள். போகுமிடமெல்லாம் பற்பல நியாயவாதங்களையும், தர்க்க ரீதியான கொள்கைகளையும், பேசிப் பேசி மக்களிடையே எண்ணற்ற முரண்பாடுகளை உண்டாக்குபவர்கள் என்றான்.
உண்மை, என்ற குரு தொடர்ந்து புன்னகையுடன், ஆனால், நீயும் அவர்களில் ஒருவன் என்பதை மறந்து விட்டாயே உன்னை மிகவும் வித்தியாசமானவன் என்று அவர்களுக்கு காட்ட முற்பட்டு அதே சச்சரவுக்கும் பிரிவுக்கும் நீயே காரணமாகிவிட்டாயே என்றார் அமைதியாக.
நீதி : உண்மை பண்பாட்டு விளக்கத்தால் நிறுவப்படுவதில்லை. மௌனம் தன்னை எப்போதும் மௌனம் என்று எப்போதும் சொல்லுவதில்லை.